திருநெல்வேலியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டியில் பாளையங்கோட்டை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருநெல்வேலி பிரிவு சார்பில் 2017-18 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டி, பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது. இப்போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 6 அணிகள் பங்கேற்றன. லீக் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன. அதிக புள்ளிகள் பெற்ற பாளையங்கோட்டை மேத்யூஷ் ஹாக்கி கிளப் அணி சாம்பியன் பட்டம் வென்றது. திருநெல்வேலி லெவன் அணி இரண்டாமிடத்தை பிடித்தது. இந்த அணிகளுக்கு முறையே ரூ. 1,600, ரூ. 800 பரிசு தொகையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
பரிசளிப்பு விழாவில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ர.வீ. வீரபரத்ரன், ஹாக்கி பயிற்சியாளர் கருணாநிதி உள்பட பலர் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற அணியினர் மண்டல அளவிலான போட்டிக்குத் தகுதிபெற்றனர்.