தொழிலாளர் நல நிதி செலுத்த இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் ஆய்வாளர் பு.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச் சட்டம் 1972 இன் படி தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு தொழிலாளர்களுக்கென பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தொழிலாளர் நல நிதிச்சட்டம் பிரிவு-2 இன் படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், ஐந்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள், உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தொழிலாளியின் பங்காக ரூ.10, வேலையளிப்பவர் பங்காக ரூ.20 சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.
அதன்படி 2017 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியைச் செலுத்த இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும். வருடத்தில் 30 நாள்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார்.
தொழிலாளர் நல நிதி செலுத்தத் தவறினால் தமிழ்நாடு தொழிலாளர் நல நிதிச்சட்டம் 28 இன் படி வருவாய் வரி வசூல் சட்டத்தின் கீழ் அந்தத் தொகையை அபராத வட்டியுடன் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே, 2017 ஆம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையை செயலர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-6 என்ற முகவரிக்கு The Secretary, Tamilnadu Labour Welfare Board, Chennai-600 006 என்ற பெயருக்கு வங்கி வரைவோலையாக அனுப்பி வைக்க வேண்டும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.