பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 14) நடைபெறவுள்ள பொங்கல் சுற்றுலா விழாவில் பங்கேற்குமாறு பொதுமக்களுக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத் துறை சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் சுற்றுலா விழா வ.உ.சி. மைதானத்தில் நடைபெறுகிறது. விழாவை மாவட்ட வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம் தொடங்கிவைக்கிறார். அதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும்.
விழா நடைபெறும் இடத்தில் பாரம்பரிய முறைப்படி அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை வரவேற்பார்கள். அதன்பிறகு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து பொங்கல் வைப்பதற்கும், பல்வேறு பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் 0462-2500104, 9176995877 ஆகிய எண்கள் அல்லது totirunelveli@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் முன்பதிவு செய்யலாம்.