தமிழக வீரர்கள் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற டிஎன்பிஎல் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றார் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் ஹேமந்த்குமார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியது: எங்களது அணியில் கடந்த ஆண்டு மூன்று வீரர்களைத் தவிர, ஏனையோர் அனைவரும் அணிக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். எனினும், அணியானது அனைத்து பிரிவிலும் தன்னிறைவு பெற்று சமமாக உள்ளது. புதிய வீரர்களை வைத்து அணியை வழிநடத்தி செல்லமுடியுமா என்ற கேள்வி பலரிடம் உள்ளது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும் கிரிக்கெட்டுக்கு புதிதானவர்கள் அல்ல. அவர்கள் இதற்கு முன்பு ஏதேனும் ஒரு அணி சார்பில் விளையாடியிருப்பார்கள். டி.என்.பி.எல். வீரர்களுக்கு சிறப்பான களத்தை ஏற்படுத்தி தரும். தமிழக வீரர்கள் தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் வாய்ப்புகளைப் பெற டிஎன்பிஎல் பெரிதும் உதவிகரமாக உள்ளது என்றார் அவர்.