கடையநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்ற அண்ணன், தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலக் கடையநல்லூரைச் சேர்ந்தவர் பரமசிவன். இவர் குடும்பத்துடன் இலத்தூரிலுள்ள கோயிலுக்கு பைக்கில் சென்று விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனராம்.
பரமசிவனின் மகன் சுந்தரபாலகிருஷ்ணன்(24), மகள் ஹேமலதா (22) ஆகியோர் ஒரு பைக்கிலும், பரமசிவன், ஹேமலதாவின் கணவர் செல்வராஜ் ஆகியோர் ஒரு பைக்கிலும் வந்து கொண்டிருந்தனராம்.
மங்களபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது புளியங்குடியிலிருந்து, தென்காசி நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியதாம். இதில் சுந்தரபாலகிருஷ்ணன், ஹேமலதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
இதுகுறித்து கடையநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து, பேருந்து ஓட்டுநர் கோவில்பட்டியைச் சேர்ந்த சுப்புராஜிடம் விசாரித்து வருகின்றனர். ஹேமலதாவுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.