மாஞ்சோலை மலைப் பகுதியில் தொடர் சாரல் மழையால், மணிமுத்தாறு அருவியில் 2ஆவது நாளாக குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தென் மேற்குப் பருவமழை தீவிரமானதையடுத்து, திங்கள்கிழமை முதல் மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர் சாரல் மழை பொழிந்து வருகிறது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் தொடர் சாரல் மழை இருப்பதால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் மாஞ்சோலை மலைப் பகுதியிலும் தொடர் சாரல் மழை இருப்பதால், மணிமுத்தாறு அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து வியாழக்கிழமை நண்பகல் 12 மணிமுதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
தொடர்ந்து வியாழக்கிழமை இரவும் சாரல் மழை நீடித்ததால், வெள்ளிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் மணிமுத்தாறு அருவி பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை.
இதனால் சுற்றுலாப் பயணிகள் அருவி பகுதிக்கு செல்ல முடியாமலும், குளிக்க முடியாமலும் ஏமாற்றமடைந்தனர். மேலும், சாரல் மழை தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டால், பயணிகள் குளிக்க தடை நீட்டிக்கப்படும் என வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.