புளியங்குடி அருகே சிந்தாமணியில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.
வாசுதேவநல்லூர் சங்கிலி வீரன் தெருவைச் சேர்ந்த கார்த்திக்ராஜ் மகன் செல்வக்குமார்(30). புளியங்குடி நகராட்சி சார்பில் குடிநீர் குழாய் பதிக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்தார்.
வியாழக்கிழமை சிந்தாமணி அகஸ்தியர் கோயில் பகுதியில் குழாய் பதிக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தாராம். அப்போது இரவு 7 மணியாகிவிட்டதால் மின் விளக்கு உதவியுடன் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டாராம். அப்போது எதிர்பாரதவிதமாக மின்விளக்கு சரிந்ததில் குழிக்குள் வேலை பார்த்துக்கொண்டிருந்த செல்வக்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில் மயங்கிய அவரை, உடன் பணிபுரிந்த தொழிலாளர்கள் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து புளியங்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.