திருநெல்வேலியில் ரயிலில் மூதாட்டி தவறவிட்ட நகை, பணத்தை மீட்டு, அவரிடமே ஒப்படைத்த உதவி ஆய்வாளருக்கு திங்கள்கிழமை பரிசு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை, பாரதிநகரைச் சேர்ந்த பீட்டர் மனைவி அமலாமேரி (66). கோவை- நாகர்கோவில் விரைவு ரயிலில் திங்கள்கிழமை நாகர்கோவிலுக்கு வந்தார். ஏ-ஒன் ஏ.சி. பெட்டியில் பயணித்த அமலாமேரி, தான் கொண்டு வந்த கைப்பையை ரயிலில் தவறவிட்டுச் சென்று விட்டாராம்.
இதுகுறித்து, சென்னை ரயில்வே உதவி மையத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், அந்த ரயிலில் பணியில் இருந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் பிரைட் மோகன்தாஸிடம் விவரம் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவர் சம்பந்தப்பட்ட ஏ.சி. பெட்டியில் கிடந்த அந்தப் பையை மீட்டு, உரியவரிடம் ஒப்படைத்தார். அந்தப் பையில் 6.25 பவுன் தங்கநகைகள், ரூ.5200 ரொக்கம், ஆதார் அட்டை, வங்கிகளின் ஏடிஎம் கார்டுகள், ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன.
இதையொட்டி, திருநெல்வேலியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், காவல் உதவி ஆய்வாளரின் கடமையை பாராட்டி, துணைக் கண்காணிப்பாளர் இ.பி. அன்பழகன், பரிசு வழங்கினார். இதில், ரயில்வே காவல் ஆய்வாளர்கள் அருள்ஜெயபால், பிரவீன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.