திருநெல்வேலி மாநகராட்சி வரிவசூல் மையங்கள் இம்மாதம் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் (பொ) நாராயணன் நாயர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாநகராட்சியில் 2017-18ஆம் ஆண்டுக்கான தீவிர வரிவசூல் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ஆட்டோ மூலம் அறிவிப்புகள் அனுப்பியும், பத்திரிகை செய்தி மூலமும், குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதவிர பொதுமக்கள் வரி மற்றும் வரியில்லா இனங்கள் செலுத்த ஏதுவாக சனிக்கிழமைகளில் செயல்படுவது போல், இம்மாதம் 31ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் செயல்படும். சொத்துவரி, குடிநீர்க் கட்டணம், காலிமனை வரி, தொழில் வரி, கடை வாடகை மற்றும் இதர வரியினங்களைச் செலுத்தலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.