வள்ளியூர்-ராஜபுதூருக்கு பேருந்து இயக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வள்ளியூர் வியாபாரிகள் சங்கச் செயலர் எஸ்.ராஜ்குமார் திருநெல்வேலி மண்டல போக்குவரத்து மேலாளருக்கு அனுப்பியுள்ள மனு:
வள்ளியூர்-ராஜபுதூருக்கு இடையே ஏராளமான கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த வழித்தடத்தில் உள்ள சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. மேலும், இடைப்பட்ட கிராம மக்கள் வள்ளியூர் வந்து செல்ல போக்குவரத்து வசதி இல்லை. இருசக்கர வாகனங்கள், ஆட்டோ, வாடகை கார் போன்றவற்றில்தான் பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. பள்ளி மாணவர், மாணவிகள் காலை, மாலையில் பள்ளிக்கு வந்து செல்ல ஏதுவாக பேருந்து வசதி இல்லை.
எனவே, மாணவர், மாணவிகளின் வசதிக்காக, வள்ளியூரில் இருந்து ராஜபுதூருக்கு, காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்து இயக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.