நெல்லை விரைவு ரயிலில் முன்பதிவில்லாத பெட்டிகளுக்கு பூட்டுப்போட்டதால், திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் புதன்கிழமை இரவு மறியலில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி- சென்னை விரைவு ரயில் திருநெல்வேலியில் தினமும் இரவு 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் முன்னும், பின்னும் தலா 2 பெட்டிகள் வீதம் 4 பெட்டிகள் முன்பதிவில்லா பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்.
இந்த பெட்டிகளில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். தற்போது கோடை விடுமுறை என்பதால் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகம் காணப்படுகிறது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 7.15 மணி வரை முன்பதிவில்லாத பெட்டிகள் திறக்கப்படவில்லை. அந்தப் பெட்டிகள் தொழிற்சங்கத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால், அதிர்ச்சி அடைந்த பயணிகள் தங்களுக்கு முன்பதிவில்லா பெட்டிகளை ஒதுக்க வேண்டும் எனக் கூறி ரயில் முன் மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், சந்திப்பு காவல் உதவி ஆய்வாளர் பேச்சு நடத்தினார். எனினும், அதே ரயிலில் முன்பதிவில்லா பெட்டிகளில் பயணிக்க தங்களை அனுமதித்தே தீர வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ஒதுக்கீடு செய்யப்பட்ட முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தால் அரை மணி நேரம் தாமதமாக 8.15 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
இதனால், தொடர்ந்து வந்த குருவாயூர், அனந்தபுரி, செந்தூர் ஆகிய விரைவு ரயில்கள் தாமதமாகச் சென்றதுடன், பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.