திருநெல்வேலியில் திமுகவினர் வியாழக்கிழமை திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னையில் முதல்வரைச் சந்திக்க எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை சென்றதாகவும் அவரை முதல்வர் சந்திக்க மறுத்ததாகவும் கூறி சென்னையில் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலியில் கிழக்கு மாவட்ட திமுக செயலரும் முன்னாள் பேரவைத் தலைவருமான இரா. ஆவுடையப்பன் தலைமையில் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே பெரியார் சிலை முன் திமுகவினர் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருநெல்வேலி பேரவைத் தொகுதி உறுப்பினர் ஏ.எல்.எஸ். லெட்சுமணன், வழக்குரைஞர் தினேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
திருநெல்வேலி சந்திப்பு அண்ணாசிலை முன் நடைபெற்ற சாலைமறியலுக்கு பாளையங்கோட்டை பேரவைத் தொகுதி உறுப்பினர் டி.பி.எம். மைதீன்கான் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ மாலைராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். திருநெல்வேலி மாநகர பகுதியில் 2 இடங்களில் மறியலில் ஈடுபட்ட 55 திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
களக்காட்டில் 28 பேர்: களக்காட்டில் அண்ணா சிலை முன் திமுக ஒன்றியச்செயலர் பி.சி. ராஜன் தலைமையில் சாலைமறியல் நடைபெற்றது. இதில் பங்கேற்றவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், திமுக செயல் தலைவரை விடுவிக்கக் கோரியும் முழக்கமிட்டனர். அங்கு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸார், போராட்டத்தில் பங்கேற்ற 28 பேரைக் கைது செய்தனர்.