திருநெல்வேலி சந்திப்பில் ஒரே நாளில் அடுத்தடுத்த 4 கடைகளில் நிகழ்ந்த திருட்டுச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி சந்திப்பில் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இரு புறங்களிலும் ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. ஸ்ரீபுரம் பகுதியில் திருநெல்வேலி நகரைச் சேர்ந்த ஹனீபா (42) என்பவர் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். சனிக்கிழமை காலை கடையை திறந்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்து ரொக்கப் பணம் ரூ. 20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இக்கடைக்கு அடுத்து பழனிக்குமார் என்பவரின் வெல்டிங் பட்டறையில் இருந்து ரூ. 1000 ம், சுத்தமல்லியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் எலக்ட்ரிக்கல் கடையில் ரூ. 1000 ம், திருநெல்வேலி நகரைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் உணவகத்தில் இருந்து ரூ. 1000 மும் திருடப்பட்டது தெரியவந்தது. மர்ம நபர்கள் கடைகளின் மேற்கூரை ஓட்டைப் பிரித்து உள்ளே சென்று திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது.
தகவலறிந்த, மாநகர காவல் உதவி ஆணையர் எஸ்கால், காவல் ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் திருட்டு நடைபெற்ற கடைகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். விரல்ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தடுத்த கடைகளில் நிகழ்ந்த இத்திருட்டு சம்பவம் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.