திருநெல்வேலி பழையபேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தார்.
ஏர்வாடியைச் சேர்ந்தவர் சுரேஷ் (22). இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவன் (32). கட்டடத் தொழிலாளியான இவருவரும் பழையபேட்டை அருகே காந்திநகரில் நடைபெற்ற வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனராம். தென்காசி-பேட்டை சாலை சந்திப்பு அருகே சென்றபோது மோட்டார் சைக்கிளும், மினிலாரியும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுரேஷ் சனிக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.