திருநெல்வேலி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் ஒவ்வொரு மாதமும் வட்ட அளவிலான பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் கூட்டம் இரண்டாவது சனிக்கிழமை நடத்தப்படுகிறது.
அதன்படி சனிக்கிழமை (அக்.13) திருநெல்வேலி வட்டம் அண்ணாநகர் பேட்டை, பாளையங்கோட்டை வட்டம் பாளையஞ்செட்டிகுளம், சங்கரன்கோவில் வட்டம் களப்பாகுளம், தென்காசி வட்டம் இலஞ்சி தென்றல்நகர், செங்கோட்டை வட்டம் இலத்தூர், சிவகிரி வட்டம் சங்குபுரம், வீரகேரளம்புதூர் வட்டம் குலையனேரி, ஆலங்குளம் வட்டம் சுப்பையாபுரம், அம்பாசமுத்திரம் வட்டம் பிரம்மதேசம், நான்குனேரி வட்டம் அரியகுளம், ராதாபுரம் வட்டம் பணகுடி, திசையன்விளை வட்டம் சிவந்தியாபுரம், கடையநல்லூர் வட்டம் புளியங்குடி, திருவேங்கடம் வட்டம் சத்திரங்கொண்டான், மானூர் வட்டம் அழகியபாண்டியபுரம், சேரன்மகாதேவி வட்டம் கூனியூர் ஆகிய இடங்களில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அந்தந்த கிராம மக்கள் பங்கேற்று பயனடையலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.