தாமிரவருணி மகா புஷ்கரம்: 2 ஆவது நாளாக குறுக்குத்துறையில் ஆரத்தி வழிபாடு

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறையில் 2 ஆவது நாளான

திருநெல்வேலி குறுக்குத்துறை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறையில் 2 ஆவது நாளான வெள்ளிக்கிழமை   நடைபெற்ற தாமிரவருணி மகா புஷ்கர ஆரத்தி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடம் சார்பில்,  திருநெல்வேலி சந்திப்பு தைப்பூச மண்டபம், குறுக்குத்துறை சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறை,  திருப்புடைமருதூர் நாறும்பூ நாதசுவாமி கோயில் படித்துறை தீர்த்தக் கட்டங்களில் தாமிரவருணி மகா புஷ்கர விழா நடைபெறுகிறது.
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில் படித்துறையில் தாமிரவருணி மகா புஷ்கர குறுக்குத்துறை கமிட்டி சார்பில் மகா புஷ்கர விழா 12 தினங்கள் நடைபெறுகிறது.
வியாழக்கிழமை திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் நீராடினார்.  இதைத்தொடர்ந்து நதிக்கு ஆரத்தி வைபவம் நடைபெற்றது.
வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு மகா புஷ்கரம் ஹோமங்களுடன் தொடங்கியது.  விழாவை இலுப்பை பட்டி கல்யாணம் சிவாச்சார்யார் கொடியேற்றி தொடங்கிவைத்தார்.  சப்த நதிகளை ஆவாஹனம் செய்யும் பூஜை,  புனித நீராடுதல் நடைபெற்றது.  இதில்,  திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் சுவாமிகள், சென்னை தம்ரானந்தா சுவாமிகள்,  சர்மா சாஸ்திரிகள்,  இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத்,  ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம்,  மகாலட்சுமி சுப்பிரமணியன்,  வளசை ஜெயராமன்,  டாக்டர் தேவராஜன்,  அரவிந்த் சீதாராமன் மற்றும் முக்கிய பிரமுகர்கள்,  பொதுமக்கள்,  சாதுக்கள் கலந்துகொண்டனர். 
குறுக்குத்துறை தீர்த்தக் கட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் அதிகாலையில் இருந்தே நீராடுவதற்கு பக்தர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.   தொடர்ந்து பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி மஹோத்ஸவம் நடைபெற்றது. இதையடுத்து,  தாமிரவருணி பாடல் ஒலிக்க நதி ஆரத்தி வைபவம் நடைபெற்றது.  இதில்,  ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.   புஷ்கரத்தையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.  கலைநிகழ்ச்சிகள்,  உபன்யாசம் நடைபெற்றன.  இரவில் கணேஷ் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
வெள்ளிக்கிழமைகளில்  நதியை வழிபட வேண்டும்: நிகழச்சியில் அர்ஜூன் சம்பத் பேசியது:  நதிகளை வணங்குவது பாரத பண்பாடு.  நதிகளை தாயாக வணங்குகிறோம்.  குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம்பெயர்ந்ததை அடுத்து தாமிரவருணி நதியில் 144 ஆண்டுகளுக்குப் பிறகு மகா புஷ்கரம் நடைபெறுகிறது. புஷ்கர விழா நடத்துவது நம்முடைய பாரம்பரியம்,  பண்பாடாகும். 
தாமிரவருணி நதியை தூய்மையாக வைத்திருக்க நாம் அனைவரும் உறுதிமொழி எடுக்க வேண்டும்.  தினமும் தாமிரவருணி தாயை வணங்குங்கள்.  ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மகா ஆரத்தி  எடுத்து வழிபட வேண்டும் என்றார் அவர்.
புஷ்கர விழாவின் 3ஆவது நாளான சனிக்கிழமை காலை 7 மணிக்கு தோஷம் விலக்கும் நவக்ரஹ ஹோமம்,  பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி,  மாலையில் மகதி வெங்கடசுப்பிர மணியன் சொற்பொழிவு,   சென்னை ஹம்ரிதா நரேந்திரன் பரத நாட்டியம்,  இரவில் பரத நாட்டிய நிகழ்ச்சி ஆகியன நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com