ஆலங்குளம் அருகே பச்சிளம் குழந்தையை கொன்ற தந்தை கைது

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே பிறந்து 22 நாள்களேயான பச்சிளம் குழந்தையை குளத்தில்

திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே பிறந்து 22 நாள்களேயான பச்சிளம் குழந்தையை குளத்தில் வீசிக் கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு பிறந்த குழந்தையும் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம் அருகே உள்ள அய்யனார்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் இசக்கிமுத்து(27), கூலித் தொழிலாளி. இவருக்கும், சீதபற்பநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த மாரியப்பன் மகள் இசக்கியம்மாள் என்ற ஆனந்திக்கும் (21) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தம்பதிக்கு கடந்த 22 நாள்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து குழந்தையுடன் ஆனந்தி சீதபற்பநல்லூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்தாராம். அப்போது,  குழந்தையைப் பார்க்கச்  சென்ற இசக்கிமுத்து குழந்தையுடன் ஆனந்தியை அய்யனார்குளம் வரும்படி அழைத்தாராம். அப்போது, இசக்கி முத்து மது அருந்தி இருந்ததால், மாமியார் முத்துலட்சுமி மகளை அனுப்ப மறுத்தாராம். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பிரச்னை ஏற்பட்டுள்ளது. 
இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் இசக்கிமுத்து சீதபற்பநல்லூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு குடிபோதையில் வந்து தங்கியுள்ளார். அதிகாலையில் குழந்தையையும், இசக்கிமுத்துவையும் காணவில்லையாம். சந்தேகமடைந்த ஆனந்தியின் பெற்றோர், இதுகுறித்து சீதபற்பநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதன்பேரில், ஆலங்குளம் காவல் ஆய்வாளர் ஐயப்பன், அய்யனார்குளத்தில் இருந்த இசக்கிமுத்துவை பிடித்து விசாரணை நடத்தினார். இதில் அவர், முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் குழந்தையை தூக்கிச் சென்று சீதபற்பநல்லூர் குளத்தில் வீசிக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார்  வழக்குப் பதிவு செய்து இசக்கிமுத்துவை கைது செய்தனர்.
குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மனைவி மற்றும் குழந்தையை அனுப்ப மறுத்து அவமானப்படுத்தியதால், ஆத்திரத்தில் குழந்தையை தூக்கிச் சென்று குளத்தில் வீசியதாக இசக்கிமுத்து கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு பிறந்த அவரது பெண் குழந்தை 22 நாள்கள் ஆன நிலையில், அய்யனார்குளம் வீட்டில் தொட்டிலில் தூங்கி கொண்டிருந்தபோது மர்மமான முறையில் இறந்துள்ளது. தற்போது, இதுகுறித்தும் போலீஸார் இசக்கிமுத்துவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com