திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது.
வடகிழக்குப் பருவமழை இன்னும் சில நாள்களில் தொடங்க உள்ள நிலையில் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை காலையில் வெயில் அதிகமாக இருந்த நிலையில், இரவு 7.30 மணிக்கு பலத்த மழை பெய்தது.
திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி, திருநெல்வேலி நகரம் பகுதிகளில் பெய்த மழையால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் மிகவும் மெதுவாகவே நகர்ந்து சென்றன.
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம், சிந்துபூந்துறை பகுதிகளில் முறையாக வடிகால் ஓடைகள் சீரமைக்கப்படாததால் மழைநீர் அதிகளவில் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மாநகரப் பகுதிகளில் உள்ள அனைத்து கழிவுநீரோடைகளையும் விரைவாக சீரமைக்கவும், அடைப்புகளை நீக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.