புளியங்குடி அருகே பைக் விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்.
சாம்பவர் வடகரையைச் சேர்ந்தவர் தர்மர் (65). இவரது மகன் பாலமுருகன் (27). இருவரும் சொக்கம்பட்டியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இருவரும் பைக்கில் வேலைக்குச் சென்றனராம். திரிகூடபுரம் அருகே கருப்பாநதி சாலையில் செல்லும் போது, குறுக்கே நாய் வந்ததால் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்த இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தர்மர், அங்கு உயிரிழந்தார். பாலமுருகன் கடையநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து சொக்கம்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.