பாபநாசம் தாமிரவருணியில் சனிக்கிழமை தவறி விழுந்த செல்லிடப்பேசியைத் தேடிய இளைஞர், ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
சங்கரன்கோவில் காந்தி நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த உடையார் மகன் உதயகுமார் (19). இவர், ஈமச்சடங்கிற்காக உறவினர்களுடன் சனிக்கிழமை பாபநாசம் வந்திருந்தாராம். அப்போது தாமிரவருணி ஆற்றின் நடுவில் இருந்த பாறையில் நின்று சுயபடம் எடுத்த போது செல்லிடப்பேசி தவறி தண்ணீரில் விழுந்ததாம். உடனடியாக தண்ணீரில் மூழ்கித் தேடத் தொடங்கினார். நீண்டநேரமாகியும் அவர் வெளியே வராததால், உறவினர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். மேலும் அம்பாசமுத்திரம் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.
தீயணைப்பு மீட்பு வீரர்கள் வந்து பாறை இடுக்கில் சிக்கி உயிரிழந்த உதயகுமாரின் உடலை மீட்டனர். உடலை பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு விக்கிரமசிங்கபுரம் போலீஸார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல் உதவி ஆய்வாளர் மாரியப்பன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.