செங்கோட்டை கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் கூறினார்.
தென்காசியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலம், தமிழகத்தில் வழக்கமான ஒன்று. ஊர்வலத்தை ஏன் தடுக்க வேண்டும்? செங்கோட்டையில் நடந்த சம்பவங்கள் விரும்பத்தகாதவை. ஊர்வலத்தில் செல்பவர்கள் கலவரத்தில் ஈடுபட்டால் அதனை தடுப்பதற்கு காவல்துறையினர் உள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பது காவல்துறையினருக்கு தெரியும். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் முஸ்லிம், இந்து என்று கூறுவது தவறு. இரண்டு சமுதாயத்திலும் சில குற்றவாளிகள் உள்ளனர். அந்தக் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்கள் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்ற வழக்குகளில் தொடர்புடைய சமூக விரோதிகளை குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்ய வேண்டும்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து சமாதானக் கூட்டங்களை நடத்த வேண்டும். அனைத்து சமுதாயத்தினர், பொதுமக்கள், என்.ஜி.ஓக்கள், வர்த்தக சங்கத்தினர், பொதுமக்கள் நலன் விரும்பும் இயக்கங்களை அழைத்து இதுபோன்ற கூட்டங்களை தொடர்ந்து நடத்தி இயல்பு நிலை ஏற்பட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செங்கோட்டையில் பல கடைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு கருணை உள்ளத்தோடு இழப்பீட்டு தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின்போது கடையநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் முகம்மது அபூபக்கர், மாநில அமைப்பு செயலர் நெல்லை மஜீத், மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், முகம்மது அலி ஆகியோர் உடனிருந்தனர்.