சாத்தான்குளம் அருகே அண்ணனுடன் விஷம் குடித்த தங்கையும் சனிக்கிழமை இறந்தார்.
தெற்கு பன்னம்பாறையைச் சேர்ந்தவர் மகாராஜன் (59). அரசுப் பேருந்து ஓட்டுநராக இருந்த இவர் அண்மையில் ஓய்வுபெற்றாராம். இவரது மகன் மணிகண்டன் (20) தந்தையின் ஓய்வூதிய பணத்தில் ஆட்டோ வாங்கித் தருமாறு கேட்டாராம். இன்னும் ஓய்வூதியப் பணம் வரவில்லை என தந்தை தெரிவித்தாராம். இதனால் இருவருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மணிகண்டனும், அவரது தங்கை இசக்கியும்(18) கடந்த 2 ஆம் தேதி விஷம் குடித்தனர். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மணிகண்டன் வியாழக்கிழமை இறந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசக்கி சனிக்கிழமை இறந்தார்.
இதுகுறித்து சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.