கோவில்பட்டியில் வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் நகராட்சி அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர்.
கோவில்பட்டி நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் குடிநீர் இணைப்புகள் 3 மாதங்களுக்குத் தாற்காலிகமாகத் துண்டிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து,திருமண மண்டபம், மருத்துவமனை,விடுதிகள் உள்ளிட்ட 450 குடிநீர் இணைப்புகளை 3 மாதங்களுக்குத் தாற்காலிகமாகத் துண்டிக்கும் பணி சில தினங்களில் தொடங்கவுள்ளதையறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் வடக்கு மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில்,செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருமண மண்டப உரிமையாளர்கள் ராஜகுரு, ராஜேந்திரன், விடுதி உரிமையாளர்கள் ஆகியோர் நகராட்சி அலுவலகம் முன் திரண்டு கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை நகராட்சி பொறியாளர் சுப்புலட்சுமியிடம் அளித்தனர்.