அதிமுக துணைப் பொதுச் செயலராக டிடிவி தினகரன் நீடிக்கிறார் என்றார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ.
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் தற்போது 122 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் பெருபான்மை ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சிக்கு எந்த பிரச்னையும் கிடையாது.
இப்போது கட்சி இணைப்பு குறித்து பேசி வருகின்றனர். நல்ல முடிவு வந்தால் சந்தோஷம்தான். கட்சி இணைந்தால் மீண்டும் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்பதால் அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
டிடிவி தினகரன் ஒதுங்கி இருப்பேன் என்று செல்லியிருக்கிறார். ஆனால் அவர் கட்சியைவிட்டு வெளியே போகவில்லை. அதிமுக துணை பொதுச்செயலராக நீடிக்கிறார்.
இரு அணிகளும் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறும்போது மாறுபட்ட கருத்து ஏதும் கூறினால் பேச்சுவார்த்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தி விடும் என்பதால் வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார் அவர்.