தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் இரண்டு அலகுகளில் பழுது ஏற்பட்டதால் வெள்ளிக்கிழமை 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்உற்பத்தித் திறன் கொண்ட 5 அலகுகள் உள்ளன. இதன் மூலம் தினமும் சுமார் 1,050 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அண்மைக் காலமாக தொடர்ந்து பழுது ஏற்படுவதால் முழுமையான மின் உற்பத்தி நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 16ஆம் தேதி 3ஆவது அலகில் உள்ள கொதிகலனில் பழுது ஏற்பட்டது. அந்த பழுது சரிசெய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே 4ஆவது அலகில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் கொதிகலனில் பழுது ஏற்பட்டது.
இதன் காரணமாக அந்த அலகின் செயல்பாடு உடனடியாக நிறுத்தப்பட்டு, பழுதை சரிசெய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகளில் பழுது ஏற்பட்டுள்ளதால் தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.