அரசு மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து பயன்பெறலாம் என சாத்தான்குளம் வேளாண் உதவி இயக்குநர் (பொ) நெடுஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சாத்தான்குளம் பகுதி விவசாயிகள் தென்னை, கரும்பு, பருத்தி போன்ற பயிர்களுக்கு சொட்டுநீர் முறையில் பாசனம் செய்திடவும், கடலை, பருத்தி மற்றும் பயறு வகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் முறையில் பாசனம் செய்திடவும் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்குகிறது.
தெளிப்பு நீர் பாசனக் கருவிகளை எளிதில் வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து பயன்படுத்த முடியும். சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைத்திட விரும்பும் விவசாயிகள் தங்கள் புகைப்படம், குடும்ப அட்டை நகல், சிட்டா நகல், அடங்கல் நகல், நில வரைபடம், கிணறு ஆவணம், நீர் மற்றும் மண் பரிசோதனை ஆவணம், சிறு குறு விவசாயி சான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் இணையதள முகவரியில் விண்ணப்பித்தால், 49 நாள்களுக்குள் முழு பணிகளும் முடித்து தரப்படும். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்கள், வேளாண்மை அலுவலர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.