கோவில்பட்டி கல்வி மாவட்ட அளவில் நடைபெற்ற பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஏ அணி முதல் பரிசை வென்றது.
ரோட்டரி சங்கம் சார்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இப்போட்டியில், முதல் ஆட்டத்தை மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் தொடங்கிவைத்தார். 6 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன.
இறுதிப் போட்டியில், கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஏ அணியும், ராவிள்ள கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி அணியும் மோதின. இதில், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஏ அணி வெற்றி பெற்று முதல் பரிசைத் தட்டிச் சென்றது. கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளி 2ஆம் இடமும், கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி 3ஆம் இடமும் பிடித்தது.
பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, ரோட்டரி செலிபிரேஷன் தலைவர் மயில் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் விநாயகா ரமேஷ், உதவி ஆளுநர் ஜெயப்பிரகாஷ் நாராயணசாமி, முன்னாள் தலைவர் பரமேஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ரவிமாணிக்கம், செயலர் வெங்கடேஷ், பள்ளி உதவித் தலைமையாசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வெற்றி பெற்ற அணிகளுக்கு வாலிபால் சர்வதேச நடுவரும், தூத்துக்குடி மாவட்ட வாலிபால் சங்க துணைச் செயலருமான சீனிவாசன் பரிசு மற்றும் கோப்பைகளை வழங்கினார். ரோட்டரி சங்கத் தலைவர் முத்துச்செல்வன், உடற்கல்வி இயக்குநர் காளிராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.