தென்திருப்பேரை அருகே உள்ள கோட்டூர் அருள்மிகு உமையாள் உடனுறை அருள்மிகு குறுஈஸ்வரமுடையார் கோயில் மண்டல பூஜை நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் ரூ.15 லட்சம் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கடந்த ஜூன் 25ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜைகள் நடைபெற்றன. மண்டல பூஜை நிறைவை முன்னிட்டு சனிக்கிழமை 108 வலம்புரி சங்காபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் மகா ருத்ர யாகம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றன. நிகழ்ச்சியில், பெருங்குளம் செங்கோல் ஆதீனம், சென்னை தொழிலதிபர் நாராயண சுவாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.