ஆறுமுகனேரி மேலசண்முகபுரம் புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழாவினையொட்டி புனித அன்னம்மாள் சொரூப சப்பர பவனி நடைபெற்றது.
புனித அன்னம்மாள் ஆலயத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினசரி மாலை மறையுரை மற்றும் மாலை ஆராதனை நடைபெற்றது. 9ஆம் திருவிழாவன்று இரவு புனித அன்னம்மாள் சொரூபம் சப்பரத்தில் மடத்துவிளை புனித சவேரியார் ஆலயத்தில் புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியே பவனி வந்து புனித அன்னம்மாள் ஆலயம் வந்தடைந்தது.
அங்கு திருவிழா சிறப்பு மாலை ஆராதனை நடைபெற்றது. ஆறுமுகனேரி பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார், ஜீவா நகர் பங்குத்தந்தை சகேஷ் மற்றும் சென்னை வேப்பேரி பங்கு சமூகப் பணியாளர் சுரேஷ் ஆகியோர் ஆராதனையை நடத்தினர். பின்னர் புனித அன்னம்மாள் சப்பரம் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் புனித சவேரியார் ஆலயம் சென்றடைந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை பங்குத்தந்தை ஸ்டார்வின் அடிகளார் மற்றும் சமூகப் பணியாளர் சுரேஷ் ஆகியோர் நடத்தினர். நிகழ்ச்சியில், ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் திரளாக கலந்துகொண்டு புனித அன்னம்மாளை வழிபட்டனர்.