கோவில்பட்டி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கஞ்சிக் கலயம், முளைப்பாரி, அக்னிச் சட்டி ஊர்வலம் நடைபெற்றது.
கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மன்றத்தில் உலக மக்களின் நலன் கருதியும், மழை வளம் பெருகவும், இயற்கை சீற்றங்கள் தணியவும், மக்கள் மனிதநேயத்துடன் வாழவும், தொழில் வளம் பெருகவும், 27 அக்னிச் சட்டி, 67 முளைப்பாரி, 702 கஞ்சிக் கலய ஊர்வலம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஊர்வலத்தை முன்னாள் அதிமுக நகரச் செயலர் எஸ்.சங்கரபாண்டியன் தொடங்கிவைத்தார். கோட்ட கலால் அலுவலர் வள்ளிக்கண்ணு முன்னிலை வகித்தார்.
ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் வழிபாட்டு மன்றத்தை வந்தடைந்தது. இதில், திரளான செவ்வாடைத் தொண்டர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை வழிபாட்டு மன்றத் தலைவர் அப்பனசாமி, செயலர் வரலட்சுமி, பொருளாளர் சுகுணா, ஒருங்கிணைப்பாளர் வரதராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.