விவேகானந்தா கேந்திரம் கிராம முன்னேற்றத் திட்டம் கோவில்பட்டி கிளை சார்பில், பள்ளி மாணவர், மாணவிகளுக்கான பண்பாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமசாமி தலைமை வகித்தார். கவுணியன் மெட்ரிக் பள்ளி கல்வி ஆலோசகர் ஸ்ரீவித்யா குத்துவிளக்கு ஏற்றி போட்டிகளை தொடங்கிவைத்தார்.
விவேகானந்தா கேந்திர கிராம முன்னேற்றத் திட்டச் செயலர் அய்யப்பன் வாழ்த்திப் பேசினார். 1, 2, 3ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கான கதை சொல்லுதல் போட்டி, 4, 5ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கான ஒப்பித்தல் போட்டி, 6, 7, 8ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கான ஒப்பித்தல், பேச்சு, நினைவாற்றல் சோதனைப் போட்டி மற்றும் 9, 10ஆம் வகுப்பு மாணவர், மாணவிகளுக்கான ஒப்பித்தல் மற்றும் ஓவியப் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டியில், கோவில்பட்டி நகர்ப்புற பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 20 பள்ளிகளைச் சேர்ந்த 300 பேர் கலந்துகொண்டனர். போட்டிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை விவேகானந்தா கேந்திர கோவில்பட்டி கிளை பொறுப்பாளர் பரமகுரு செய்திருந்தார்.