தூத்துக்குடி அருகே வியாழக்கிழமை, சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் பெண் உள்பட இருவர் இறந்தனர்; 12 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பஞ்சிகாலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒபுலிராஜ். இவரது மனைவி பிரியங்கா, மகன் ஒபுலி கிறிஸ்து (3).
ஒபுலிராஜ் தன் மகனின் பிறந்த நாளையொட்டி திருச்செந்தூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட 13 பேருடன் வேனில் புதன்கிழமை இரவு புறப்பட்டார். அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (32) வேனை ஓட்டினார்.
தூத்துக்குடி- மதுரை நான்குவழிச் சாலையில் புதூர்பாண்டியாபுரம் அருகே வியாழக்கிழமை காலை வேன் சென்றுகொண்டிருந்தது. அப்போது, சாலையரம் நின்றிருந்த லாரி மீது வேன் திடீரென மோதியது. இதில் வேனின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. அதில் பயணம் செய்த பஞ்சிகாலிப்பட்டியைச் சேர்ந்த ரகுநாதன் மகன் நவீன் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த ஓட்டுநர் சரவணன் உள்ளிட்ட 13 பேர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிறிது நேரத்தில் லட்சுமி (50) என்பவர் இறந்தார். விபத்து குறித்து புதியம்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.