ஸ்ரீவைகுண்டத்தில் வாரச்சந்தை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஸ்ரீவைகுண்டத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரச் சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடைபெற்று வந்தது. இச்சந்தையில் வியாபாரிகள் காய்கனிகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை குறைந்த விலையில் விற்பனை செய்து வந்தனர்.
இதன் மூலமாக ஸ்ரீவைகுண்டம், சுற்று வட்டாரப் பகுதிகளான பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்கற்குளம், கொங்கராயகுறிச்சி, மணக்கரை, வெள்ளூர், கெட்டியம்மாள்புரம், ஆதாளிகுளம் உ ள்ளிட்ட பகுதி மக்கள், விவசாயிகள் பயனடைந்து வந்தனர்.
தற்போது, இச்சந்தை செயல்படாத நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான சந்தை கட்டடம் மிகவும் சேதமடைந்து பயனற்று உள்ளது. சந்தை செயல்படாததால் இப்பகுதி மக்கள் சாத்தான்குளம், நாசரேத், பேய்குளம், செய்துங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வெவ்வேறு கிழமைகளில் வாரச் சந்தைகளுக்கு சென்று பொருள்களை குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர்.
இதுகுறித்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டப் பொருளாளர் துரைசரவணன், தூத்துக்குடி மாவட்ட தொழிற்சங்க பொதுச் செயலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, ஸ்ரீவைகுண்டம் முத்தாரம்மன் கோயில் தெருவில் அமைந்துள்ள மகளிர் காவல் நிலையம் அருகே உள்ள வாடகை வேன் நிறுத்தம் பகுதியிலிருந்து கிறிஸ்தவ ஆலயம் வரையிலும் மீண்டும் வாரச்சந்தை அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.