நாட்டின் சுதந்திரத்திற்காக தன்னையே அர்ப்பணித்த தியாகி விஸ்வநாததாஸின் 76ஆவது நினைவு நாள் கோவில்பட்டி மார்க்கெட் சாலை சந்திப்பில் சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது.
இவர், நாடகங்கள் மூலம் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஏற்படுத்தினார். 1940 டிசம்பர் 31ஆம் தேதி இந்திய சுதந்திரத்திற்காக நாடகம் நடத்திக் கொண்டிருக்கும்போது, மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே உயிர் நீத்தார்.
மறுமலர்ச்சி பேரவையின் நெல்லை மண்டலம் சார்பில் நடைபெற்ற அவரது 76ஆவது நினைவு தின நிகழ்ச்சிக்கு, அதன் மாநில ஆலோசகர் காளியப்பன் தலைமை வகித்தார். திருமுருகன், சோலைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை நெல்லை மண்டல துணைத் தலைவர் அய்யப்பன் செய்திருந்தார்.