தூத்துக்குடி மாவட்டத்தில் 20 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன: எஸ்.பி. தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் 20 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் 20 சதவீதம் குற்றங்கள் குறைந்துள்ளன என்றார் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ்.
இதுகுறித்து, அவர் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி: தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் பஸ் மார்ஷல் திட்டம் சிறப்பாக இயங்கி வருகிறது.
மாவட்டத்தில் வழிப்பறி, திருட்டு, பெண்கள் கேலி செய்தலைத் தடுக்க 29 மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவை தற்போது 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் குற்றங்கள் குறைந்துள்ளன.
கடந்த 2014ஆம் ஆண்டில் 86 கொலை வழக்குகளும், கடந்த 2015ஆம் ஆண்டு 78 கொலை வழக்குகளும், நிகழாண்டில் 62 கொலை வழக்குகளும் மாவட்டத்தில் பதிவாகியுள்ளன. இதன் மூலம் மாவட்டத்தில் கொலை குற்றங்கள் 20 சதவீதம் குறைந்துள்ளது.
கொலை முயற்சி வழக்குகள் கடந்த 2015 ஆம் ஆண்டு 251 பதிவு செய்யப்பட்டிருந்தது. நிகழாண்டு 184 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு 5 ஆதாய கொலை வழக்குகள் பதிவான நிலையில், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டு வருவதால் நிகழாண்டில் 2 வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் 59 கொள்ளை வழக்குகள் பதிவாகின. 2016ஆம் ஆண்டில் 55 வழக்குகள் மட்டும் பதிவாகியுள்ளன. சிறிய திருட்டு மற்றும் களவு வழக்குகள் 2015ஆம் ஆண்டில் 236 பதிவாகியிருந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில் இது குறைந்து 189 வழக்குகள் மட்டும் பதிவாகியிருந்தது. இந்த வழக்குகளில் 1.93 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் உள்ள ரவுடிகள் செயல்பாட்டை கண்காணிக்கும் விதமாக 50 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 2,327 பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
விபத்துகளை தடுக்கும் வகையில், வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டு, 1,64,925 மோட்டார் வாகன வழக்குகள் போடப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரூ. 3.11 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் முக்கிய 21 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 32 குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களில் உரிமை கோரப்படாத 635 வாகனங்கள் ஏலம் விடப்பட்டு, அதன் மூலம் ரூ. 17 லட்சம் கிடைக்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வல்லநாடு துப்பாக்கி சுடுதளம் மேம்படுத்தப்பட்டு கடந்த 6 ஆண்டுக்கு பிறகு துப்பாக்கி சுடும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டள்ளன. தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிவரும் தூத்துக்குடி மாவட்ட காவல் துறை மூலம் குற்றங்கள் கடந்த ஆண்டுகளை விடவும் குறைந்துள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com