தூத்துக்குடியில் திங்கள்கிழமை காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஆயுதப்படை காவலரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி ஆயுதப்படை பிரிவில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வராஜ். இவர், திங்கள்கிழமை மாலை ரோல்கால் என அழைக்கப்படும் வழக்கமான பணிக்கு மற்ற காவலர்களை அழைத்து இருந்தாராம். அப்போது, இதில், கலந்துகொண்ட ஆயுதப்படை பிரிவு காவலர் சுரேஷ் திடீரென செல்வராஜியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, செல்வராஜ் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக உதவி ஆய்வாளர் செல்வராஜ் தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். பணிக்கு வந்த காவலர் சுரேஷ் மது அருந்தி இருந்ததாகவும், தகாத வார்த்தைகளில் பேசியபடி கையால் தாக்கியதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து வழக்குப் பதிந்த போலீஸார் ஆயுதப்படை காவலர் சுரேஷை கைது செய்தனர். காயமடைந்த உதவி ஆய்வாளர் செல்வராஜ் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.