சீரான குடிநீர் வழங்கக் கோரி முற்றுகை
கோவில்பட்டியையடுத்த ஈராச்சி ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட கசவன்குன்று பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
கசவன்குன்று கிராமத்தில் 9ஆவது வார்டு பகுதியில் கடந்த 4 மாத காலமாக குடிநீர் விநியோகிக்கவில்லையாம். இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து ஊராட்சி மன்றம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எவ்வித பலனும் இல்லையாம். இதையடுத்து, திங்கள்கிழமை பாஜக ஒன்றியச் செயலர் ராம்கி தலைமையில், மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன், பாஜக நிர்வாகிகள் மாரிமுத்து, பெருமாள்சாமி உள்பட அப்பகுதி பெண்கள் காலிக் குடங்களுக்கு மாலை அணிவித்து, சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் சேவகப்பாண்டி, போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டது.