தூத்துக்குடி அருகேயுள்ள புதியம்புத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலரட்டும் புது விடியல் என்ற கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூரைச் சேர்ந்த புலவர் கணேசன் எழுதிய புலரட்டும் புது விடியல் என்ற மரபுக் கவிதை நூல் வெளியீட்டு விழா புதியம்புத்தூரில் நடைபெற்றது. இதில், தென்மண்டல பசுமை தீர்ப்பாய நீதிபதி ஜோதிமணி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். எழுத்தாளர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த. ஸ்டாலின் குணசேகரன் நூலை பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில், பேரிலோவன்பட்டி பள்ளித் தாளாளர் ரவீந்திரன், முன்னாள் அரிமா ஆளுநர் ராமசாமி, பேராசிரியர் ராசமாணிக்கனார், பேராசிரியர்கள் ராஜாராம், சேலம் தமிழ்மாறன், தூத்துக்குடி வாசுகி, சுந்தரலிங்கம், தொழிலதிபர் சென்னை செல்வக்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்த ராஜன் நூலாசிரியர் கணேசனை பாராட்டி கவிதை மற்றும் ஆசிரியரைப் பற்றிய குறுந்தகடு வெளியிட்டார். நிகழ்ச்சியில், கவிஞர் மகேந்திரபாபு, தங்கராஜ், செல்வகுமார், தர்மா, உமா, பச்சை பெருமாள், அருள்மொழிச் செல்வன், வெள்ளைத்துரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.