மதுரை மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்னாண்டோவின் உடல் தூத்துக்குடியில் திங்கள்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
பீட்டர் பெர்னாண்டோ உடல் நலக் குறைவு காரணமாக கடந்த 31 ஆம் தேதி மதுரையில் காலமானார். அவரின் இறுதிச் சடங்குகள் தூத்துக்குடியில் உள்ள சின்னக்கோயில் என அழைக்கப்படும் திருஇருதய பேராலய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 15 கத்தோலிக்க ஆயர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட அருட்தந்தைகள் கலந்துகொண்டனர்.
பீட்டர் பெர்னாண்டோவின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தலைமையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர். சுந்தரராஜ் (ஓட்டப்பிடாரம்), ஐ.எஸ். இன்பதுரை (ராதாபுரம்), அதிமுக மாவட்டச் செயலர் சி.த. செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.