திருச்செந்தூர் வங்கியில் ஓய்வுபெற்ற ஆசிரியரை ஏமாற்றி, ரூ. 24 ஆயிரம் மோசடி செய்தவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே காயாமொழி எருசலேம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் தாமஸ் எலியேசர் (83). ஓய்வுபெற்ற ஆசிரியர்.
இவர், பணம் எடுப்பதற்காக திங்கள்கிழமை மதியம் திருச்செந்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு வந்தார். அதற்கான படிவத்தை நிரப்பி வரிசையில் நின்றார். அப்போது அங்கு வந்த சுமார் 45 வயது மதிக்கதக்க ஒருவர், வயதான காலத்தில் நீங்கள் வரிசையில் நின்று அவதிப்பட வேண்டாம். நான் பணம் எடுத்து தருகிறேன். நீங்கள் ஓரமாக உட்காருங்கள் எனக் கூறி, படிவத்தை வாங்கி கொண்டார். அதை நம்பி தாமசும் அங்கிருந்த இருக்கையில் உட்கார்ந்திருந்தார். வெகுநேரமாகியும் அந்த நபர் வராததால் சந்தேகமடைந்த அவர் வங்கியில் விசாரித்தார். அப்போது அவரது கணக்கில் ரூ. 24 ஆயிரம் எடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், திருச்செந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல் ஆய்வாளர் க.ஆடிவேல் வழக்குப் பதிந்து, அந்த மர்மநபரை தேடி வருகிறார்.