விளாத்திகுளம் அருகே நிகழ்ந்த கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்ட இளைஞர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
சங்கரலிங்கபுரம் அருகேயுள்ள கவுண்டம்பட்டியைச் சேர்ந்த பரமசிவன் மகன் செல்வராஜ் (45). இவர் 2016 நவம்பர் 18ஆம் தேதி கொலை செய்யப்பட்டார். இக் கொலை வழக்கில் தொடர்புடைய பொன்முத்துப்பாண்டி மதுரை நீதிமன்றத்தில் ஏற்கெனவே சரணடைந்தார்.
இந்நிலையில், இவ் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவில்பட்டி பாரதி நகரைச் சேர்ந்த மாடசாமி மகன் மகாராஜன் (24) கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்-1 இல் செவ்வாய்க்கிழமை சரணடைந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயசுதாகர், இம்மாதம் 6ஆம் தேதி வரை மகாராஜனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் இவ் வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் கோவில்பட்டி வீரவாஞ்சி நகரைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் மருதுபாண்டி(24) திங்கள்கிழமை கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற எண்-1இல் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.