மோட்டார் சைக்கிள் ஓட்டுவோர் தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தூத்துக்குடி, கழுகுமலையில் செவ்வாய்க்கிழமை விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இருசக்கர வாகனம் ஓட்டுநர் கண்டிப்பாக தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதன் அவசியம் மற்றும் பாதுகாப்பை வலியுறுத்தி காவல் துறை சார்பில், தூத்துக்குடி மில்லர்புரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின் கோட்னீஸ் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் அவர் வழங்கினார். மேலும், அந்த வழியாக தலைக்கவசம் அணிந்து சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு காவல் துறையினர் இனிப்பு வழங்கினர்.
மில்லர்புரத்தில் தொடங்கிய பேரணி வஉசி கல்லூரி வழியாக 3 ஆம் மைல் பகுதியில் நிறைவடைந்தது.
கோவில்பட்டி: கழுகுமலை காவல் நிலையம் முன்பிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, காவல் ஆய்வாளர் ஷாஜகான் தலைமை வகித்து, தொடங்கிவைத்து, தலைக்கவசம் அணிந்தபடி பேரணியில் பங்கேற்றார்.
இதில், கழுகுமலை காவல் நிலையத்திற்கு உள்பட்ட போலீஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர்.