ஆறுமுகனேரியில் மாணவருக்கு டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டதையடுத்து, சுகாதாரத் துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு வீடு வீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
ஆறுமுகனேரி காமராஜ்புரம் வடக்கு தெரு இசக்கிமுத்து மகன் கிருஷ்ணகுமார்(11). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாவட்ட சுகாதாரத் துறையினர் மற்றும் நடமாடும் மருத்துவமனை பணியாளர்கள், புதன்கிழமை காமராஜ்புரத்தில் முகாமிட்டு அப்பகுதி மக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர்.
வட்டார அளவிலான 6 சுகாதார ஆய்வாளர்களை உள்ளடக்கிய குழுவினர், தொடர்ந்து அங்கு முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியை தூத்துக்குடி சுகாதாரத் துறை துணை இயக்குநர் மதுசூதனன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சிவராம்குமார்(காயாமொழி), சீனிவாசன் (ஆறுமுகனேரி), காயல்பட்டினம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் ஆகியோர் வந்திருந்தனர்.