தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்ற ஆயுதப்படை போலீஸார், துப்பாக்கித் தோட்டாக்களை தவறவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி ஆயுதப்படையில் பணிபுரியும் போலீஸார் கைதிகளுக்கு பாதுகாப்பு பணிக்காக செல்வது வழக்கம். அதன்படி, ஆயுதப்படையில் பணிபுரியும் காவலர் சுரேஷ், பெண் காவலர் மாரியம்மாள் ஆகியோர் செவ்வாய்க்கிழமை பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்து கைதிகளை அழைத்துச் செல்வதற்காக சென்றனராம். ஆயுதப்படை அலுவலகத்திலிருந்து புறப்படும்போது இரண்டு 303 ரக துப்பாக்கிகள் மற்றும் தலா 5 தோட்டாக்கள் வீதம் பெற்றுச் சென்றனராம். ஆனால், அவர்கள் திரும்பி வந்தபோது 5 தோட்டாக்கள் குறைவாக இருந்ததாம்.
இதுகுறித்து ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் தளவாய் பிள்ளை தென்பாகம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.