தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் உலக நன்மைக்காக 164 இடங்களில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெற உள்ளது என மாவட்ட இந்து முன்னணி பொதுச் செயலர் பெ. சக்திவேலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக நன்மைக்காகவும்,இந்துக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதம், பிரிவினைவாதம், மதம் மாற்றம் நிகழாமல் இருக்கவும்,இந்துகளிடம் மீது விரோத ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் ஆண்டும் தோறும் ஜனவரி மாதம் பாரத மாதா பூஜை வழிபாடு நடத்தப்பட்டு வருகின்றன. இதையொட்டி நிகழாண்டு 164 இடங்களில் பாரத மாதா பூஜை வழிபாடு நடைபெறுகிறது. இந்த வழிபாடு ஜன. 7ஆம் தேதி தொடங்கி ஜன. 26ஆம் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது.
முதல் நாளான சனிக்கிழமை(ஜன.7) சாத்தான்குளம் ஒன்றியம் வாலிவிளையில் தொடங்குகிறது. பூஜையை மாநில இந்து முன்னணி துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலர் டாக்டர் அரசுராஜா ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைக்கின்றனர். ஜன. 26ஆம்தேதி திருச்செந்தூர் ஒன்றியம் ஆத்தூரில் பாரத மாதா பூஜை வழிபாடு நிறைவு பெறுகிறது. இதில் மாவட்டத் தலைவர் வி.எஸ். முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் ஆர்.எஸ். சுந்தரவேல், மாவட்ட செயலர்கள் சீத்தாராமன், சுடலைமுத்து உள்பட பலர் கலந்துகொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.