மூப்பன்பட்டி ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, அப்பகுதி மக்கள் கோவில்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூப்பன்பட்டி ஊராட்சிப் பகுதியில் சுமார் 80 தெருவிளக்குகள் சில நாள்களாகவே எரியவில்லையாம். மேலும், திருமங்கை நகர், மூப்பன்பட்டி உள்ளிட்ட 6 இடங்களில் மின் மோட்டார் பழுதால் வெகுநாள்களாக தண்ணீர் கிடைக்காமலும் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்களாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.
இதையடுத்து, ஊராட்சி முன்னாள் தலைவர் மாரீஸ்வரன் தலைமையில் அப்பகுதி மக்கள் திரண்டு வந்து கோவில்பட்டி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) சேவகப்பாண்டி பேச்சுவார்த்தை நடத்தி, இப்பிரச்னைகளுக்கு சில தினங்களில் தீர்வுகாணப்படும் என உறுதியளித்தார். இதையேற்று போராட்டத்தை கைவிட்ட மக்கள், செவ்வாய்க்கிழமைக்குள் (ஜன.10) நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என கூறிச்சென்றனர்.