தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.
பாரதிய கிசான் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் அதன் தலைவர் ரெங்கநாயகலு தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலர் சேசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட பசு பாதுகாப்பு தலைவர் பரமசிவம், மாவட்ட மகளிரணி தலைவி கிருஷ்ணம்மாள், கோவில்பட்டி ஒன்றியத் தலைவர் கிருஷ்ணசாமி, துணைத் தலைவர் பாலகிருஷ்ணன், கயத்தாறு ஒன்றியத் தலைவர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர்கள் தாமோதரக்கண்ணன், செளந்தரராஜன், பெருமாள்சாமி, சீனிவாசன், நாகலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனவலியுறுத்தி மத்திய, மாநில அரசை வலியுறுத்தி இம்மாதம் 11ஆம் தேதி கோவில்பட்டியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, ஸ்ரீவைஷ்ணவ ஸ்தாபகர் ஸ்ரீராமானுஜர் 1000ஆவது ஆண்டு ஜெயந்தி விழா வைஷ்ணவ சங்கமம் என்ற பெயரில் கோவில்பட்டியில் இம்மாதம் 21ஆம் தேதி கிருஷ்ணன் கோயில் தெருவில் பொதுக்கூட்டம் நடத்துவது, பருவமழை பொய்த்ததால் இறந்து போன விவசாயிகளுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பருவமழை இல்லாத காரணத்தினால் பொய்த்து போன விவசாய நிலங்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
விவசாய நிலங்களை ஆக்கிரமித்திருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.