தூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்த இடத்தை வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.
"மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் Zero Defect, Zero Effect என்ற உலக அளவிலான உற்பத்தி சான்றிதழை பெற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனம் சார்பில், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆட்சியர் மேலும் பேசியது:
கடல், ரயில், சாலை, ஆகாயம் என நான்கு வழி போக்குவரத்து வசதிகளை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான வெளி கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.
தற்போது தூத்துக்குடி முதல் மதுரை வழியாக இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல, பயண நேரத்தை குறைக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்த பிறகு குளத்தூர் விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு மற்றொரு பாதை அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சுங்கசாவடி கட்டணமின்றி சரக்குகளை கொண்டுவரும் வகையில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார் அவர்.
நிகழ்ச்சியில், மத்திய அரசின் கூடுதல் தொழில் ஆலோசகர் சண்முகநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராஜராஜன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உதவி இயக்குநர் ஜெரினா பப்பி, துடிசியா தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.