மாநில ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தூத்துக்குடி மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த கழகம், தமிழ்நாடு மாநில ஜூனியர் வீரர், வீராங்கனைகளுக்கான மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் தனியார் தொழில்நுட்பக்கல்லூரியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதுமிருந்து வீரர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 18 வீரர்கள் பங்கேற்றனர். இதில் வெள்ளிப்பதக்கத்தை விஜயலட்சுமி (58 கிலோ), கெளரி (74 கிலோ) ஆகியோரும், வெண்கலப்பதக்கத்தை எலைசாதாய் கிரேஸ் (48 கிலோ), ரோகிணி (53 கிலோ), ஜென்சி (63 கிலோ) ஆகியோரும் வென்றதுடன், மாநில அளவில் இரண்டாமிடத்திற்கான கோப்பையையும் வென்றனர்.
வெற்றி பெற்றவர்களை தமிழ்நாடு அமெச்சூர் மல்யுத்த கழக பொருளாளர் அ.கிறிஸ்டோபர்ராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட மல்யுத்த கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் சி.பாலமுருகன், பி.சிவலிங்கம் உள்ளிட்டோர் பாராட்டினர்.