தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கைவினைஞர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்களைப் பற்றியும், அவர்களது திறமைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் சேகரித்து, அவர்களுக்கென இணையதளம் உருவாக்க தமிழக அரசு, தமிழ்நாடு புதுமை முயற்சிகள் திட்டம் 2015-16 ஆம் ஆண்டின் கீழ் ஆணை வழங்கியுள்ளது.
இந்த இணையதளத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பக்கம் உருவாக்கப்பட உள்ளது. இதில் கைவினைஞர் மற்றும் அவர்களது திறமைகள் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும். இதன் மூலம் கைவினைஞர்கள் பற்றிய அனைத்து விவரங்களும் அரசின் கவனத்துக்கு வருவதுடன், சமூக வலைதளங்கள் மூலம் உலகளாவிய சந்தையினை சென்றடைய வழிவகை செய்யப்படும்.
தமிழகத்தில் உள்ள அனைத்து கைத்திறன் கைவினைஞர்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, கணக்கெடுக்க வரும் அதிகாரிகளிடம் கைவினைஞர் மற்றும் தங்களது திறமை பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுதொடர்பாக, உரிய படிவத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், 759, அண்ணா சாலை, சென்னை-600 002 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்பி வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.